பூஜைக்காகாத காகிதபூ....

வழி தவறி
வாழ்வின்
சுமையும்  தாங்கி....
நிழல் தேடினாள்
பேதையொருத்தி...

இளங்காற்று  
வீசும்
ஆலமரத்தினடியில்
அடைக்கலம்
கொண்டாள்..

தீயென
எரியும் 
கத்திரி வெயில்..
அதனினும்
எரியும்
வயிறும்...

அருந்தினாள்
கொஞ்சம்
தண்ணீர்
மட்டும்..!

இரு
கைகளால்
தலையை
தாங்கி ,
பார்த்தாள்..
ஒரு
செல்லாதென
விலக்கப்பட்ட
ஐநூறு ரூபாய் நோட்டு...!
தரையில்..
மெல்ல கையில்
எடுத்தாள்..
நோட்டை,
வரட்டு சிரிப்புடன்
உரைக்கிறாள்...!!

புத்தம் புதிதாய்
நோட்டாக
ஜன்மம் எடுத்து
நீ...

பணக்காரர்களின்
அறைகளில்
பத்திரமாக
தூங்கியிருப்பாய்..

கோவில்
உண்டியலில்
குறுக்கும்
நெடுக்குமாய்
படுத்திருப்பாய்..

நல்ல நாளில்
குழந்தைகளுக்கு
பரிசாக
விளங்கியிருப்பாய்..

சிறுவர்களுக்கு
கட்டணம்..
பூசாரிக்கு
தட்சணை..
கள்வர்க்கு
கள்ளப்பணமாய்
வாழ்ந்திருப்பாய்...

மீனவர்
கூடையில்
மீன் வாடையில்
தாங்கவும்
தூங்கவுமுடியாமல்,
தவித்திமிருப்பாய்..

பலசரக்கு
கடையில்,
பணப்பெட்டியில்
சில்லறைக்கூட்டத்தில்
கசங்கி
இருந்திருப்பாய்...

கடைசியில்...
கரும்பின் 
சக்கையாய்
போன
இந்த
பரத்தையின்
கரங்களில்
வந்து
விட்டாயா....?

உன்னைப்
போலவே
துளசிச்செடியாய்
ஒரு நல்ல தாய்
என்னைப்
பெற்றெடுத்தாள்

ஐந்து வயதில்
அனாதையாய்...
அறியாமையின்
இருள் பயமாய்
படர
உறவினர் வீட்டிலும்
பழகினோர் வீட்டிலும்
பாசப்பசியுடன்
வாழ்ந்த
நாள்கள்...

கயிறுதிரிக்கும்
பணியிடத்தில்,
பாசக்கயிற்றுடன்
ஒருவன்...
யமனாய்
கழுத்தில்
கயிறு மாட்டினான்...

பலநாள்
பங்கு
வைத்தான்..
கூச்சப்படாமலே...

நான்..
விற்கும்
பொருளாக
பரிணமித்தேன்...

உடலை. ..
உணவாக்கும்
பரிதாபங்கள்
பொண்ணுக்கு
மட்டும்...!!

உன்னைப்
போலவே
செல்லாத நோட்டு
நான்...

பூஜைக்காகாத
காகிதப்பூ நான்...

Comments

  1. பூஜைக்காகாத காகிதப்பூ நல்ல கவிதை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செய்தி மழையில்.....!

அம்புலிப் பொண்ணை காப்பாற்று